குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

12 June, 2009

காக புசண்டர் :

காக புண்ட சித்தர் ஒரு காக்கை வடிவில் பல இடங்களில் சுற்றி அலைந்து பல விஷயங்களை கண்டறிந்தார் என்பர். இவர் வரரிஷியின் சாபத்தால் சந்திரக் குலத்தில் பிறந்தார். இவர் அறிவிற்சிறந்தவர். பெரும் தபசி. இவர் பிரளய காலங்களில் அவிட்ட நட்சத்திர பதவியில் வாழ்வார். ஆகையால் இவரை காகபுண்டர் என்பர்.

ஒருசமயம் கயிலையில் தேவர்கள், சித்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். சிவபெருமான் தனக்கு எழுந்த சந்தேகத்தை அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்தார். “இந்த உலகமெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து விட்ட பிறகு எல்லோரும் எங்கு இருப்போம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன், சதாசிவம் ஐவர்களும் எங்கே இருப்பார்கள் தெரியுமா?” என்றார்.

எல்லோரும் மௌனமாக இருந்தனர். மார்க்கண்டேயர் “இதற்கு திருமாலே பதில் சொல்வார்” என்றார். திருமாலிடம் சிவன் கேட்டார். அவரும் “பிரளயத்தில் எல்லாம் அழிந்து போயின. ஆழிலை மேல் பள்ளி கொண்டிருந்த என்னிடத்தில் சித்துக்கள் யாவும் ஒடுங்கின. நானும் துயிலில் ஆழ்ந்திருந்தேன். என் சார்பாக எனது சுதர்சன சக்கரம் யாராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கு வந்த புண்டர் எப்படியோ என் சக்கரத்தினை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைத் தாண்டிச் சென்றார். அதனால் அவர் மிகவும் வல்லவர். வசிட்டரை அனுப்பி அவரை அழைத்து வருவதுதான் சரி, அவரால் மட்டுமே உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலும்” என்றார்.

சிவனும் வசிட்டரை அனுப்பி புசுண்டரை அழைத்து வரும்படி சொன்னார். அவரிடம் தன்னுடைய சந்தேகத்தினைக் கூறினார். புண்டரும் தான் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ மும்மூர்த்திகள் அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்கு பிறகும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டதை பார்த்ததாகவும் கூறினார்.

தாம் காக உருவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லாழ மரத்தின் மேல் வீற்றிருந்து இந்த அதிசயங்களைக் கண்டதாகவும் கூறினார்.

காக புண்டர் துணைகாவியத்தில் இந்நிகழ்ச்சி விளக்கமாகக் கூறப்படுகிறது.

காக புண்டர் பெயரில் வைத்திய நூல்கள் பல உண்டு. அவைகளில் கிடைத்தவை:
1. புண்டர் நாடி,
2. காகபுண்டர் ஞானம் – 80
3. காக புண்டர் உபநிடதம் – 31
4. காக புண்டர் காவியம் – 33
5. காக புண்டர் குறள் – 16
இவை இவருடைய வேதாந்தக் கருத்துக்களைக் கூறுகின்றன.

காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்ட காக புண்டர் யோகஞானம், சமாதிமுறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூல்களில் கூறப்பட்டுள்ளன.

“இல்லறமாயினும், துறவறமாயினும் மனதில் மாசின்றி ஒழுக வேண்டும். அப்படி ஒழுகாவிடில் செய்யும் பிற செயல்கள் வீண் பகட்டாகக் கருதப்படும்” என்கிறார்.

காக புசுண்டர் திருச்சி உறையூரில் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி கொண்டதாகவும் சித்தர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி காகபுசுண்டர் சித்தர் வரலாறு வெளியிட்ட தளங்களுக்கு !

No comments: