குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

27 February, 2010

அழுகணிச் சித்தர் பாடல்கள் 4

இதோ இன்னும் அழுகணி சித்தர் பாடல்களுடன் ......

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்குத் தாராயோ ? 31

வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ! 32

ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி
அருளடைய வேணுமென்று
தாங்காமல் வந்தொருவன் - ஆத்தாடி
தற்சொரூபங் காட்டி யென்னை 33

கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி
கொண்டான் குருவாகி
கள்களப் புலனறுக்க - ஆத்தாடி
காரணமாய் வந்தாண்டி. 34

ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி
ஐம்பத்தோர் அக்கரமும்
சூதான கோட்டையெல்லாம் - ஆத்தாடி
சுட்டான் துரிசறவே. 35

வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
மாண்டுவிழக் கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி. 36

மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
மலர்பறித்துத் தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி. 37

பாடிப் படித்து - ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் - ஆத்தாடி
உருக்கெட்டு விட்டேண்டி. 38

மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண். 39

புத்தி கலங்கியடி - ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் - ஆத்தாடி
பாழியில் கவிழ்ந்தேனே. 40

தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள் . . .


அழுகணிச் சித்தரின் வரலாறு முற்றிற்று


நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!


மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

23 February, 2010

அழுகணிச் சித்தர் பாடல்கள் 3


இதோ இன்னும் அழுகணி சித்தர் பாடல்களுடன் ......

சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி! 21

பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி! 22

கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா!
கடுகளவு காணாதோ! 23

பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன ? 24

ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்
சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில்மெழு கானேனடி! 25

தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
மாயக் கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ ? 26

அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ! 27

உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்குத் தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ ? 28

காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன ? 29

சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா!
சிலையுங் குலையாதோ! 30


நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!


[இன்னும் அழுகணி சித்தர் பாடல்களுடன் வளர்வோம் ....]

20 February, 2010

[யாருக்கு ஞானம்...]

இதோ ஒன்று ஞானப்பாடல் ....

கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே !

-சிவவாக்கியார்.

இந்தப் பாடலின் கருத்தை கூற வேண்டியதில்லை .....

எவ்வளவு தெளிவும், துணிவும் இருந்தால் இந்த வரிகள் பாடலாக வரும். இந்த அளவிற்கு ஞானத்துணிவு அனைத்து சித்தர்களிடமும் இருக்கிறது. காரணம் என்ன?

சமயங்களையும், அதற்காக அடித்துக் கொண்டு சாகும் சாமானியர்களையும் காக்கும் பொருட்டு மட்டும் இதை அவர்கள் குறிப்பிடவில்லை. உண்மையின் உச்சத்தை தன் வரிகளில் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.

சரி ஒரு நிகழ்வு ....

ஒரு முறை ஒரு ஞானியிடம் ஒரு பக்தர் ஒருவர்..

"சுவாமி ஞானம் பெறுவதற்கு நான் தகுதி உடையவனா? " என்று வினவினார்..

" நீ உயிரோடு இருக்கிறாயா?" என்றார் ஞானி.

அந்த பக்தர் அதிர்ந்து போய்...

"சுவாமி நான் உயிரோடு தான் இருக்கிறேன். அதில் என்ன சந்தேகம்?" என்றார்.

"அப்படியானால், ஞானம் பெறுவதற்கு தேவையான தகுதி அதுதான்" என்றார் ஞானி.

அந்த ஞானி வேறு யாருமல்ல திருவண்ணாமலையில் வாழ்ந்த பகவான் ரமண மகரிஷி அவர்களே..

சந்திப்போம் நல்லோர்களை சிந்திப்போம்...

நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!

18 February, 2010

அழுகணிச் சித்தர் பாடல்கள் 2

இதோ இன்னும் அழுகணி சித்தர் பாடல்களுடன் ......

மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண்விழிக்க வேகாவோ! 11

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ! 12

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ! 13

உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி! 14

மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி! 15

காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ! 16

தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றொல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்! 17

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ! 18

கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன ? 19

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா!
காரணங்கள் மெத்தவுண்டே! 20

நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!


[இன்னும் அழுகணி சித்தர் பாடல்களுடன் வளர்வோம் ....]

14 February, 2010

அழுகணிச் சித்தர் பாடல்கள் 1

இவர் பாடல்கள் அனைத்தும் ஒப்பாரி போல அமைந்து இருப்பதால் அவருக்கு அழுகணி சித்தர் என பெயர் வந்திருக்கலாம் என கூறுவர்.

இவர் பாடல்களில் இருக்கும் அழகையும், அணியையும் காரணமாக் வைத்து அவருக்கு அழகணி சித்தர் என பெயர் வந்து அதுவே மருவி அழகுனி சித்தர் என மாரியதாக் கூறுவார். இவர் பாடல்கலில் அழுகன்னி, தோழுகன்னி மூலிகைகளை மிகுதியாக கையாண்டுள்ளார்.

இவர் பெயரில் 32 கலிதாழிசைகள் உள்ளன. வாசியோகம் ,காய சித்தி முறை பற்றி இவர் பாடல்கள் விளக்குகின்றன. இவர் அழுகணி சித்தர் பாடல், ஞான சூத்திரம் , அழுகன் யோகம், அழுகன் வைத்தியம் போன்ற நூல்களை படைத்துள்ளார்.

இவர் நாகப்படினத்தில் உள்ள சிவ பெருமான் கோயில் வளாகத்தில் சமாதி அடைந்துள்ளார்.

பாடல்கள்

மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ! 1

எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி! 2

முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
கோலமிட்டுப் பாரேனோ! 3

சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ! 4

பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ! 5

எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ! 6

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ! 9

பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்,
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ! 10

கடைசி பாடலுக்கான பொருள்: பையூர் - கருப்பை, மெய்யூர் - மோட்சம் (அழிவில்லாத ஞானம்)பாழூர் - இந்த உலகம்


[இன்னும் பாடல்கள் வளரும்.....]

07 February, 2010

குதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 2

குதம்பை சித்தரின் பாடல்களுடன்....

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ? 17

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ? 18

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ? 19

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ? 20

அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ? 21

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ? 22

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 23

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ? 24

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ? 25

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ? 26

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ? 27

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 28

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ? 29

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ? 30

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ? 31

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ? 32

குதம்பை சித்தரின் வரலாறு முற்றிற்று.

மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

04 February, 2010

குதம்பை சித்தரின் வரலாறும், பாடல்களும் 1

யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்று மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான்.

குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.

குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார்.

இவரது பாடல்களை கீழே தருகிறேன்:

குதம்பைச் சித்தர் பாடல்கள்

கண்ணிகள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 1

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 2

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 3

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 4

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 5

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 6

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 7

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 8

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 9

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 10

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 11

வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 12

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 13

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 14

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 15

சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 16

இன்னும் பாடல்களுடன் தொடர்ந்து .... குதம்பையாருடன் செல்வோம்.....