குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

18 March, 2010

[மூடப் பக்தி ]

யாம் பொருள் கூறி இப்பாடலையும், அதன் கருத்தையும் சிதைக்க விரும்பவில்லை ஒவ்வொரு பாடலும் இன்றைய பக்தியின் நிலையை எடுத்துக் காட்டுகிறது. இதை தடங்கண் சித்தர் என்பவர் பாடியிருக்கிறார். இது எண்சீர் விருத்தமாக தங்கப் பா என்ற தலைப்பின் கீழ் இயற்றப் பட்டிருக்கிறது. மொத்தம் 11 பாடல்களே இதில் இருக்கின்றன. இவரைப் பற்றிய வேறெந்த குறிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் ஆணித்தரமான உண்மையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

இதோ உங்கள் பார்வைக்கு...

தங்கப் பா

அதிவெடி முழக்கி முரசுகள் முடுக்கி
அலறிடும் உடுக்கைகள் துடிப்ப
விதிர்விதிர் குரலால் வெற்றுரை அலப்பி
வீணிலோர் கல்லினைச் சுமந்தே
குதிகுதி என்று தெருவெலாம் குதிப்பார்
குனிந்துவீழ்ந் துருகுவர் மாக்கள்
இதுகொலோ சமயம்? இதுகொலோ சமயம்?
எண்ணவும் வௌ்குமென் நெஞ்சே! 1

அருவருப் பூட்டும் ஐந்தலை, நாற்கை
ஆனைபோல் வயிறுமுன் துருத்தும்
உருவினை இறைவன் எனப்பெயர் கூறி
உருள் பெருந் தோனில் அமர்த்தி
இருபது நூறு மூடர்கள் கூடி
இழுப்பதும் தரைவிழுந் தெழலும்
தெருவெலாம் நிகழும்; அது கொலோ சமயம்?
தீங்குகண் டுழலுமென் நெஞ்சே! 2

எண்ணெயால், நீரால், பிசுபிசுக் கேறி
இருண்டுபுன் ளாற்றமே விளைக்கும்
திண்ணிய கற்குத் திகழ்நகை பூட்டித்
தெரியல்கள் பலப்பல சார்த்திக்
கண்ணினைக் கரிக்கும் கரும்புகை கிளப்பிக்
கருமனப் பார்ப்புசெய் விரகுக்கு
எண்ணிலா மாக்கன் அடி, மிதி படுவர்
இதுகொலோ, இதுகொலோ சமயம்? 3

அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப் பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கெனத் தோன்றலும், அறியா
மழலையர் கையிலுட் காவடி கொடுத்து
மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகண் டிரங்குமென் நெஞ்சே. 4

நீட்டிய பல்லும் சினமடி வாயும்
நிலைத்தவோர் கல்லுரு முன்னே
கூட்டமாய் மோதிக் குடிவெறித் தவர்போல்
குதிப்பர் தீ வளர்த்ததில் மிதிப்பார்
ஆட்டினைத் துடிக்க வெட்டிவீழ்த் திடுவார்
ஆங்கதன் உதிரமும் குடிப்பார்
காட்டில் வாழ் காலக் கூத்துகொல் சமயம்?
கண்ணிலார்க் கிரங்குமென் நெஞ்சே! 5

உடுக்கையை அடித்தே ஒருவன்முன் செல்வான்
ஒருவன்தீச் சட்டியும் கொள்வான்
எடுத்ததோர் தட்டில் பாம்புருத் தாங்கி
இல்தொறும் சென்றுமுன் நிற்பார்
நடுக்கொடும் தொழுவார் நங்கையர், சிறுவர்,
நல்குவர் காணிக்கை பலவும்
கொடுத்தநீ றணிவார் இதுகொலோ சமயம்?
குருடருக் கிரங்குமென் நெஞ்சே! 6

வேப்பிலைக் கொத்தும், விரிதலை மயிரும்
வெவ்விதின் மடித்திடு வாயும்
கூப்பிய கையும் கொண்டவள் ஒருத்தி
குரங்கென ஆடுவள் குதிப்பாள்
நாற்புறம் நின்றே வணங்குவர் மாக்கள்
நற்குறி கேட்டிட நிற்பார்
காப்பதோ வாழ்வை? இதுகொலோ சமயம்?
கண்ணில்லார்க் கிரங்குமென் நெஞ்சே! 7

தாய்மொழி பேணார்; நாட்டினை நினையார்
தம்கிளை, நண்பருக் கிரங்கார்
தூய்நல் அன்பால் உயிர்க்கெலாம் நெகிழார்
துடிப்புறும் ஏழையர்க் கருளார்
போய்மலை ஏறி வெறுங்கருங் கற்கே
பொன்முடி, முத்தணி புனைவார்
ஏய்ந்தபுன் மடமை இதுகொலோ சமயம்?
ஏழையர்க் கிரங்குமென் நெஞ்சே? 8

பாலிலாச் சேய்கள், பசி, பணியாளர்
பல்துயர் பெருமிந் நாட்டில்
பாலொடு தயிர், நெய், கனி, சுவைப் பாகு
பருப்பு நல் அடிசிலின் திரளை
நூலணி வார்தம் நொய்யையே நிரப்ப
நுழைத்தகல் உருவின் முன் படைத்தே
சாலவும் மகிழ்வார் இதுகொலோ சமயம்?
சழக்கினுக் கழலுமென் நெஞ்சே! 9

அன்பிலார் உயிர்கட் களியிலார்; தூய்மை
அகத்திலார்; ஒழுக்கமுமில்லார்
வன்பினால் பிறரை வருததுவர்; எனினும்
வகைபெற உடம்பெலாம் பூசி
முன்தொழுகையர்; முறைகளில் தவறார்
முழுகுவார் துறைதொறும் சென்றே!
நன்றுகொல் முரண்பாடு! இதுகொலோ சமயம்?
நடலையர்க் குடையுமென் நெஞ்சே! 10

மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து
மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும்
பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை
புரிதலே இறையுணர் வன்றோ!
செய்கையால், வழக்கால், அச்சத்தால், மடத்தால்
செய்பொருள் இறைஎனத் தொழுவார்?
உய்வரோ இவர்தாம்? இதுகொலோ சமயம்?
உணர்விலார்க் குழலுமென் நெஞ்சே! 11

என்ன ஒவ்வொன்றும் ஒரு முத்துக்கள் தானே !

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

13 March, 2010

தமிழின் பெருமை.._/\_

பொய்பேசி என்ன கண்டோம்.. பேசுவோமே கொஞ்சமாவது மெய்யை...

தமிழ் பெருமையை பற்றிய ஒரு கட்டுரை நன்றாக இருந்தது, மேலும் ஒரு வரலாற்று நிகழ்ச்சி அருணகிரிநாதரின் வாழ்வில் நடந்தது இதை ஏற்கனவே புத்தகங்களில் நான் படித்திருந்ததாலும் அவையெல்லாம் இன்று கைவசம் இல்லாமல் போனது வருத்தம் தான், வலையில் மேய்ந்த போது கிடைத்ததை அப்படியே இடுகிறேன்...

தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழி யாகிவிட்டது. இதில் நாம் குறை கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகள் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு.

முத்தி தருபவன் அவனே; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே;பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்"

எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன், தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்.

"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "- திருமந்திரம்.


வேறு ஒரு பாடலில் திருமந்திரப் பாடலில் சாத்திரத்தை தமிழில் படைக்கும்அருளைக் கூட்டிப் பாடச் செய்த பெருங் கருணையைப் பாடி பரவுகிறார்.

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."

இவ்வரிகளில் தமிழில் பாடும் அருள் கிட்டியதன் பெருமை தொக்கி நிற்பதைக் காணலாம்.

" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் "
- ஞானவெட்டியான்...

"பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "

" சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்
காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்

-அகஸ்தியர் ஞானம் 100

பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போத இத்தமிழ் வாக்கியம் - ஞான வெட்டியான் 1500

கருத்து விளக்கத்திற்காகப் பயன் படுத்தப்படும் உவமை இலக்கிய சுவைக்கு மெருகூட்டுவது கும். சித்தர் பாடல்களில் கணக்கற்ற உவமைகள் காணப்படுகின்றன.

வள்ளலார் தமிழை பித்ரு மொழியாக கருதுகிறார். இறைவன் தன்னை தமிழால் வளர்க்கின்றார் என்பதை “மெய்யடியார் சபை நடுவே எந்தை உனைப்பாடி மகிழ்ந்தின்புறவே வைத்தருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய் ( 4802)

மேலும்,

வடிக்குறும் தமிழ்க்கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே- 875 என இறைவனை ப்போற்றி துதிக்கின்றார்.

சாகாகலை தந்தது- தமிழ் மொழி
ஆரவாரமில்லா மொழி- தமிழ் மொழி

தமிழ் உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வள்ளலார் கூறுகின்றார்.

வள்ளல் பெருமானை ப்பற்றி ராமலிங்கரும் தமிழும் – என திரு ஊரன் அடிகள் தனி புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். எனவே வள்ளலார் தமிழ் மொழிமேல் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதை யூகித்துக்கொள்ளவும்.

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு "தகரவர்க்க"ப் பாடல். முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர். வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே 'வில்லி பாரதம்' என்று வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

நன்றி http://www.vallalarspace.com/Kumaresan/Articles/௧௭௧௨

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

05 March, 2010

உரோம ரிஷி வரலாறு _/\_

உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது.

ஆனால் அவரோ தன்னைப்பற்றி...

"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "

பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் .
ஞால : பரிசுத்த மெய்ஞஞானம்
பதம் : பாதம்

இந்தப் பாடல் அவரது உரோம ரிஷி ஞானம் நூலில் இருந்து...

இந்த ஞானவானின் ஞானத்தை அவரின் பாடல்களே நமக்கு காட்டி தருகின்றன. இதோ ஒரு பாடல்...

தியானத்தைப் பற்றி...

செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே.

போலிகளைப் பற்றி....

மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.

தவநிலையைப் பற்றி...

சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே

என உரோம ரிஷி ஞானம் கூறுகிறது.

சித்தர்களாக,ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோம ரிஷி ஞானம் சொல்கிறது.

இதோ அப்பாடல்..

"காடேரி மலையேறி நதிகளாடி
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே "

இவர் சிங்கி வைப்பு, உரோம ரிஷி வைத்திய சூத்திரம், வகார சூதிரம், உரோம ரிஷி முப்பு சூத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!

குறிப்பு : விளக்கங்கள் அனுபவ நிலையல்ல, வெறும் தெரிவு நிலை மட்டுமே.

-உரோம ரிஷி வரலாறு முற்றிற்று-

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

04 March, 2010

யார்? சித்தர்கள் ?

46 பதிவுகளை எழுதிய பின் இப்பதிவு தேவையா? என்ற கேள்வியுடன் எழுதினாலும் சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டு இதோ ...

"வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே"

என்கிறார் பட்டினத்தார். இருந்தாலும் அவரே பின்னர் நாம் ஏமாந்து விடக்கூடாது என்று,

"பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!"

பேய்போல் திரிந்து - பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,
பிணம்போல் கிடந்து - உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,
இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி- யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,
நன்மங்கையரைத் தாய்போல் கருதித்- நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,
தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் - அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,
சேய்போல் இருப்பர்கண்டீர் - குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,
உண்மை ஞானம் தெளிந்தவரே - அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர்.

என்கிறார். ..

பரிசுத்த மெய்ஞ்ஞானம் பெற்றவர்களே சித்தர்கள்.சித்தர்கள் என்ற சொல்லின் பொருளைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ‘சித்தர்கள்’ என்ற சொல் பொதுவானதாகும். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே அடைந்த அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். மேலும் வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் என்றும் கூறலாம். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தூய்மையின் சிகரமாகவும் தெய்வீகத்தன்மையையும் கொண்டவர்கள்.

சித்தர்கள் எங்கிருந்து எதை உண்டாலும் எப்படித் தோற்றமளித்து எதைச் செய்தாலும் உலகியல் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனை "சிவ" பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லறவாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் பற்றுகளகன்று ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. “கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.”

மனிதர்களிடத்தே நிலவும் சாதிவேற்றுமைகளையும் ஏற்றதாழ்வுகளையும் கடுமையாகச் சாடிப் புரட்சி செய்தவர்கள் சித்தர்கள். சித்தத்தில் சிவனைக்காணும் வரை உடலைக் காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் காயகல்பம் உண்டவர்கள். மேலும், ஏழைகளின் நோய்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள் எளிய மருந்துகளைக் கண்டறிந்து அவர்களின் துன்பம் தீர்த்தனர். சித்தர்களில் பலர் யோகப்பயிற்சியாலும் சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள் ஆவர். இவர்கள் மனோ சக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். இவர்கள் கண்ட சராசர ரகசியங்களை அறிந்து அவற்றை வெளி உலகிற்கு அளித்தவர்கள்.

சித்தர்கள் யோகசனத்தால் பெற்ற பயன்களை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தங்களுக்காக எதுவும் செய்து கொண்டதாக தெரியவில்லை. பதினெண் சித்தர்களுக்கு முன்னே நவநாத சித்தர்கள் என்ற ஆதி தமிழ்ச்சித்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அகத்தியர் வருகைக்குப் பின்பே சித்தர் மார்க்கத்தின் மீது ஆரியவண்ணம் பூசப்பட்டு விட்டது. சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும் மிக மிக, எளிமையான இலக்கண நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓலைச்சுவடிகளில் நூல்களாக எழுதியுள்ளார்கள்.

இத்தகைய சிறப்புப் பெற்ற சித்தர்கள், தங்கள் திருமேனியை மறைத்துக் கொண்ட இடமாகக்கருதப்படும் இடங்கள் எல்லாம் தெய்வீக சக்திமிக்க திருக்கோயில்களாகக் கருதப்பட்டு போற்றப்படுகின்றன.

இந்தத்திருத்தலங்கள் பதினெண் சித்தர்களின் சமாதித்தலங்கள் எனப்பின்வரும் பாடல்மூலமாக அறியலாம்:

“ஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர்
அழகர் மலை இராமதேவர்
அனந்தசயனம் கும்பமுனி
திருப்பதி கொங்கணவர் கமலமுனியாகி
சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு
ஒர் நெல்காசியில் நந்திதேவர்
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனிமலை யோகநாதர்,
பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர்
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி
திகழ் மயூரங்குதம்பை
சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற்
சேர்ந்தன ரெமைக் காக்கவே”

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. அகத்தியர் என்ற பெயரில் மட்டும் 37 பேர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நம் தமிழ் மரபைப் சேர்ந்த அகத்தியர் திருக்குற்றால மலையில் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருந்து திருமாலைச் சிவபெருமானாக அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர். இவரது காலம் கி பி. 13 ஆம் நூற்றாண்டாகும். அகத்தியர் தமிழ்மொழி, தமிழ் இலக்கணங்களைப் பரமசிவனிடத்தில் இருந்தும், முருகப்பெருமானிடத்திலிருந்தும் கற்றுத்தமிழ் மொழியைத் தமிழ் நாட்டில் நன்கு வளர்த்தார். இவர் மார்கழி மாதம் ஆயில்யநட்சத்திரம் 3ம் மாதத்தில் பிறந்ததாகப் போகர் தமது 7000 ஆம் நூலில் கூறுகிறார்.

அகத்தியர் அருளிய நூல்கள்:
அகத்தியர் 21,000 அகத்தியர் 12,000 அகத்தியர் பரிபூரணம் அகத்தியர் ஆயுர்வேதம் அகத்தியர் நயனவிதி அகத்தியர் குணயாடம் அகத்தியர் அமுதக்கலை ஞானம் அகத்தியர் செந்தூரம் 300 அகத்தியர் வைத்திய காவியம் 1500 முதலியவையாகும். இவர் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டதாகக் கூறப்படுகிறது. இமயமலையில் வசிப்பதாகவும் கூறுவர்.

இத்தனைக்கும் மேலே வாழ்வாங்கு வாழும் வள்ளுவர் வாக்கான திருக்குறளிலே,

"எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு"

என்று கூறினாலும் அதன் வழியில் நில்லாது போனால் யாருக்கு தாழ்வு...


நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!

....ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]