குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

16 June, 2009

போகர்:

போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது.

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.

சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால்
பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான்.

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது.

இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம்
துளிர்த்துவிட்டது. துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.

மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான்
இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'சுமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது?

இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.

அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.

அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

பொதுவில் சித்த புருஷர்களின் பாடல்களில் மறைபொருள் அதிகம் இருக்கும். அவ்வளவு சுலபமாக விளங்கிக் கொள்ள இயலாது. மூலிகை ரகசியங்களை, சித்திகளுக்கான வழிமுறைகளை வார்த்தைகளுக்குள்ளேயே ஒளித்து வைத்து விடுவார்கள். யாருக்கு பிராப்தி உள்ளதோ அவரே அதை சரியாக அறிந்து கொள்வார். ஆனால், திருமூலர் இவர்களில் மிக மாறுபட்டவர். இவரின் திருமந்திரம் தமிழுக்கு அணி செய்யும்
நூல்களில் முன்னிலையில் இருக்கும் ஒன்றாகும். பாமரரும் விளங்கிக்கொள்ள முடிந்த அளவில் இவரது கருத்துகள் இருப்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்

2 comments:

vel said...

bogarin ubadesam at www.sammatham.com

Unknown said...

மிக அருமையான கட்டுரை. பல தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக மிக்க நன்றி ஆசிரியரே...