குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

06 June, 2010

கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\_ 1

நானெல்லாம் எழுதுவேன் என்று நினைத்தது இல்லை. விளையாட்டாய் ஆரம்பித்து இன்றும் விளையாட்டாகவே போய்க் கொண்டிருக்கிறது. என்னைப்பற்றியும் இவர் தெரிந்து வைத்திருக்கிறார் பாருங்கள்... சரி இப்பதிவில் கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர் பற்றி பார்ப்போமா...

தமிழ் நாட்டைப்போலவே வடநாட்டிலும் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களை நவநாத சித்தர்கள் என்கிறார்கள். அவர்கள்;
1.சத்திய நாதர், 2.சதோக நாதர், 3.ஆதிநாதர், 4.வெகுளி நாதர், 5.மதங்கநாதர், 6.மச்சேந்திர நாதர், 7.கடேந்திர நாதர், 8.அநாதி நாதர், 9.கோரக்க நாதர். ஆகியோர்.

இவர்களில் கடேந்திர நாதர் வட நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு கோவைக்கு அருகில் இருக்கும் வெள்ளயங்கிரி மலையில் வசித்திருக்கிறார். இங்குள்ள ஐந்தாவது மலையில் இருக்கும் குகை ஒன்றை இவரது குகை என்று சொல்கிறார்கள். இல்லை, இல்லை இவர் புதுச்சேரிக்காரர் என்கிறார்கள் ஒரு சாரர் சரி எதுவாகினும் சரி; எக்காலத்தில் இங்கு வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இவரைப்பற்றிய வேறு எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

ஞானம் வாய்த்தவருக்கு மொழியறிவு என்ன ஒரு பெரிய விசயமா? தமிழ் இலக்கணம் அறிந்து அதனில் பாடலும் இயற்றிப் பாடியிருக்கிறார். எங்கெங்கிருந்தோ வந்தவர்கள் நம் பெருமை அறிந்தனர், நாமோ நமதருமை தெரியாமல் இருக்கிறோம் இன்னும்... சரி இதோ பாடல்கள் ...

கண்ணிகள்

ஆதிசிவ மானகுரு விளையாட்டை - யான்
அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதிமய மானசத்தி யென்னாத்தாள் - சுய
சொரூபத் தடங்கிநின்ற விளையாட்டை. 1

பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் - ஞானம்
பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்
சீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவினை - யாட்டுச்
சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில். 2

இகபர மிரண்டுக்குஞ் சரியாகும் - இதை
இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி - முன்பு
சாற்றினா ரெந்தனுக்கீ துண்மையுடன். 3

நானென்று சொல்வதும் விளையாட்டே - இந்த
நானிலத் திருப்பதுவும் விளையாட்டே
தானென் றறிவதுவும் விளையாட்டே - பெற்ற
தாயென் றுரைப்பதுவும் விளையாட்டே. 4

தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவிற்
தநயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே - பத்து
வயது தெரிந்ததுவும் விளையாட்டே. 5

பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே - தந்தை
பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை யுணர்வதுவும் விளையாட்டே - இந்த
வையகத் திருப்பதுவும் விளையாட்டே. 6

பெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே - எங்கும்
பேரோங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டுபொருள் தேடுவதும் விளையாட்டே - பணம்
காசுவட்டி போடுவதும் விளையாட்டே. 7

மாடிமனை வீடுவாசல் விளையாட்டே - என்றன்
மனைவிமக்க ளென்பதுவும் விளையாட்டே
தேடிவைத்த பொருளெல்லாம் விளையாட்டே - இச்
செகத்திற் திரிவதுவும் விளையாட்டே. 8

ஆடுமாடு தேடுவதும் விளையாட்டே - சதுர்வே
தாகமநூ லாய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே - உற்றார்
கூடிமகிழப் பேசுவதும் விளையாட்டே. 9

பிணமா யிருப்பதுவும் விளையாட்டே - அதைப்
பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே - ஈமங்
கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே. 10

செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே - சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே - குளித்து
வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.11

வீணாட் கழிவதுவும் விளையாட்டே - சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே - குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே. 12

கனவுநினை வெண்பதுவும் விளையாட்டே - இக்
காசினியோ ருழல்வதும் விளையாட்டே
நினவாய்ச்சேய் வஞ்சகமும் விளையாட்டே - மிக்க
நிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே. 13

பெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - அவர்
பின்னாற் திரிவதுவும் விளையாட்டே
மண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - நல்ல
வயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே. 14

சீராக வாழ்வதுவும் விளையாட்டே - செம்பொன்
சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய்ப்பொய் சொல்வதுவும் விளையாட்டே - நெஞ்சில்
நினக்காமற் செய்வதுவும் விளையாட்டே. 15


பந்துசன மென்பதெல்லாம் விளையாட்டே - லோகப்
பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே
சொந்தநிதி தேடுவதும் விளையாட்டே - இதைச்
சொற்பனம்போ லெண்ணாததும் விளையாட்டே. 16

வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

திருவருள் போற்றி ! குருவருள் போற்றி !!

5 comments:

http://machamuni.blogspot.com/ said...

சித்தர் தமிழ் கண்டவிடமெல்லாம் எனக்கு அமுதூறும் நீரோடை.அற்புத சித்திகளெல்லாம் செய்த நம் சித்தர்களின் நூல்கள் எல்லாம் பொற்களஞ்சியங்கள்.
நன்றி
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்

தேவன் said...

ஆம், ஐயா.

அவைகளெல்லாம் காலத்தை கடந்து நின்று ஞானத்தை உணர்த்தும் பொற் களஞ்சியங்கள்தான்.

nandakumar07 said...

நல்ல பாடல்கள் கொடுப்பதுவும் விளையாட்டே

நடராஜன் said...

தங்களுடைய பதிவுகள் மீண்டும் மீண்டும் படித்து இன்புறத்தக்கவை

Anonymous said...

What a solace i got from this siddhar
songs.how can i express my heartful
gratitude to you.keep it up Devanji.
Madhusoodhanan.