குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

23 December, 2009

[ பட்டினத்தார் : 3]


பத்திராகிரியார் புலம்பலைத்தான் பெரும்பாலும் படித்திருப்பீர்கள் இதோ பட்டினத்தாரின் அருட்புலம்பலை படியுங்கள்.

அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு

கன்னிவனநாதா, கன்னிவனநாதா

மூலமறியேன், முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா; 1

அறியாமை யாம்மலத்தால் அறிவுமுதற் கெட்டனடா !
பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா. 2

தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
மனுவாதி சத்தி வலையி லகப்பட்டனடா 3

மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா. 4

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே. 5

மக்கள்சுற்றத் தாசை மறக்கேனே யென்குதே
திக்கரசாம் ஆசையது தீரேனே யென்குதே. 6

வித்தைகற்கு மாசையது விட்டொழியே னென்குதே
சித்துகற்கு மாசை சிதையேனே யென்குதே. 7

மந்திரத்தி லாசை மறக்கேனே யென்குதே
சுந்தரத்தி லாசை துறக்கேனே யென்குதே. 8

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

கட்டுவர்க்கத் தாசை கழலேனே யென்குதே
செட்டுதலில் ஆசை சிதையேனே யென்குதே. 9

மாற்றுஞ் சலவை மறக்கேனே யென்குதே
சோற்றுக் குழியுமின்னந் தூரேனே யென்குதே. 10

ஐந்து புலனு மடங்கேனே யென்குதே
சிந்தை தவிக்கிறதுந் தேறேனே யென்குதே. 11

காமக் குரோதம் கடக்கேனே யென்குதே
நாமே அரசென்று நாடோறு மெண்ணுதே. 12

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே
கைச்சு மின்னுமான் கழலேனே யென்குதே. 13

நீர்க்குமிழி யாமுடலை நித்தியமா யெண்ணுதே
ஆர்க்கு முயராசை அழியேனே யென்குதே. 14

கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணுந் திரமா யிருப்போமென் றெண்ணுதே. 15

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !
அநித்தியத்தை நித்தியமென் றாதரவா யெண்ணுதே
தனித்திருக்கே னென்குதே தனைமறக்கே னென்குதே. 16

நரகக் குழியும்இன்னும் நான்புசிப்பே னென்குதே
உரகப் படத்தல்கு லுனைக்கெடுப்பே னென்குதே. 17

குரும்பை முலையுங் குடிகெடுப்பே னென்குதே
அரும்புவிழியு மென்ற னாவியுண்பே னென்குதே. 18

மாதருருக் கொண்டு மறலிவஞ்ச மெண்ணுதே
ஆதரவு மற்றிங் கரக்கா யுருகிறண்டா. 19

கந்தனை யீன்றருளுங் கன்னிவன நாதா!
எந்த விதத்தினா னேறிப் படருவண்டா. 20

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ? 21

கீரியாய்க் கிடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ? 22

பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனைசெய் தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ? 23

அன்னை வயிற்றி லழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ? 24

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ? 25

நோயுண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேயுண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ? 26

ஊனவுடல் கூன்குருடா யுற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பு லிளைத்தநாள் போதாதோ? 27

பட்ட களைப்பபும் பரிதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டே னென்றுகேளாதும் போதாதோ? 28

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

நில்லாமைக்கே யழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரு மென்பார மெடுத்தநாள் போதாதோ? 29

காமன் கணையாற் கடைப்பட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் நாலுமிடியுண்டல் போதாதோ? 30

நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன்துளபத் தான்நேமி தேக்குண்டல் போதாதோ? 31

உருத்திரனார் சங்காரத் துற்றநாள் போதாதோ?
வருத்த மறிந்தையிலை, வாவென் றழைத்தையிலை 32

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

பிறப்பைத் தவிர்த்தையிலை; பின்னாகக் கொண்டையிலை,
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை; 33

பாச மெரித்தையிலை; பரதவிப்பைத் தீர்த்தையிலை;
பூசிய நீற்றைப் புனையென் றளித்தையிலை. 34

அடிமையென்று சொன்னையிலை, அக்கமணி தந்தையிலை;
விடுமுலகம் நோக்கி யுன்றன்வேட மளித்தையிலை. 35

உன்னி லழைத்தையிலை, ஒன்றாக்கிக் கொண்டையிலை,
நின்னடியார் கூட்டத்தில் நீயழைத்து வைத்தையிலை; 36

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

ஓங்கு பரத்துள் ஒளித்தவடி யார்க்கடியான்
ஈங்கோ ரடியா னெமக்கென்று உரைத்தையிலை; 37

நாமந் தரித்தையிலை, நானொழிய நின்றையிலை,
சேம வருளி லெனைச்சிந்தித் தழைத்தையிலை. 38

முத்தி யளித்தையிலை; மோனங் கொடுத்தையிலை;
சித்தி யளித்தையிலை; சீராட்டிக் கொண்டையிலை; 39

தவிர்ப்பைத் தவிர்த்தையிலை; தானாக்கிக் கொண்டையிலை;
அவிப்பரிய தீயாமென் னாசை தவிர்த்தையிலை; 40

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

நின்ற நிலையில் நிறுத்தியெனை வைத்தையிலை;
துன்றுங் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை; 41

கட்டவுல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை;
நிட்டையிலே நில்லென்றுநீ நிறுத்திக் கொண்டையிலை; 42

கடைக்கண் ணருள்தாடா, கன்னிவன நாதா!
கெடுக்கு மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா! 43

காதல் தணியேனோ! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடந்தான் தீரேனோ! 44

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

உன்னைத் துதியேனோ, ஊர்நாடி வாரேனோ,
பொன்னடியைப் பாரேனோ, பூரித்து நில்லேனோ ? 45

ஓங்காரப் பொற்சிலம்பி னுல்லாசம் பாரேனோ ?
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ ! 46

வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ !
சூரர்கண்டி போற்றுமந்தச் சுந்தரத்தைப் பாரேனோ ! 47

இடையில் புலித்தோ லிருந்தநலம் பாரேனோ !
விடையி லெழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ ! 48

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ !
மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ ! 49

மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ;
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ ! 50

கண்டங் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ !
தொண்டர் குழுவினின்ற தோற்றமதைப் பாரேனோ ! 51

அருள்பழுத்த மாமதியா மானனத்தைப் பாரேனோ !
திருநயனச் சடையளிருஞ் செழுங்கொழுமை பாரேனோ ! 52

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

செங்குழியின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ ?
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ ! 53

முல்லை நிலவெறிக்கு மூரலொளி பாரேனோ !
அல்லார் புருவத் தழகுதனைப் பாரேனோ ! 54

மகரங் கிடந்தொளிரும் வள்ளைதனைப் பாரேனோ !
சிகர முடியழகுஞ் செஞ்சடையும் பாரேனோ ! 55

கங்கையோடு திங்கள் நின்றகாட்சிதனைப் பாரேனோ !
பொங்கு அரவைத்தான்சடையிற் பூண்டவிதம் பாரேனோ 56

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ ;
எருக்கறுகு ஊமத்தையணி யேகாந்தம் பாரேனோ ! 57

கொக்கிறகுக் கூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ !
அக்கினியை யேந்திநின்ற ஆனந்தம் பாரேனோ ! 58

தூக்கிய காலுந் துடியிடையும் பாரேனோ !
தாக்கு முயலகன் தாண்டவத்தைப் பாரேனோ ! 59

வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ !
ஆசை அளிக்கு மபயகரம் பாரேனோ ! 60

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம்வளர் பேரழகைப் பாரேனோ ! 61

சுந்தர நீற்றின் சொகுகதனைப் பாரேனோ !
சந்திர சேகரனாய்த் தயவுசெய்தல் பாரேனோ ! 62

கெட்டநாள் கெட்டாலுங் கிருபையினிப் பாரேடா !
பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ ? 63

நற்பருவ மாக்குமந்த நாளெனக்குக் கிட்டாதோ ?
எப்பருவ முங்சுழன்ற ஏகாந்தங் கிட்டாதோ ? 64

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

வாக்கிறது நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்குமந்தத் தற்சுத்தி கிட்டாதோ ? 65

வெந்துயரைத் தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ ?
சிந்தையையுந் தீர்க்குமந்தத் தேறலது கிட்டாதோ ? 66

ஆன அடியார்க் கடிமைகொளக் கிட்டாதோ ?
ஊனமற வென்னை வுணர்த்துவித்தல் கிட்டாதோ ? 67

என்னென்று சொல்லுவண்டா? என்குருவே? கேளேடா !
பின்னை எனக்குநீ யல்லாமற் பிறிதிலையே. 68

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

அன்ன விசாரமது வற்றவிடங் கிட்டாதோ?
சொன்ன விசாரந் தொலைந்தவிடங் கிட்டாதோ? 69

உலக விசார மொழிந்தவிடங் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதுங் கிட்டாதோ? 70

ஒப்புவமை பற்றோ டொழிந்தவிடங் கிட்டாதோ?
செப்புதற்கு மெட்டா தெளிந்தவிடங் கிட்டாதோ? 71

வாக்கு மனாதீத வசோகசத்திற் செல்லவெனைத்
தாக்கு மருட்குருவே, நின்தாளிணைக்கே யான்போற்றி. 72

கவனமுடன் படியுங்கள் கருத்துடன் [நடைபோடுவோம்.]......

7 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல பாடல் பொறுமையாக டைப் செய்துள்ளீர்கள். நன்றி.

தேவன் said...

இல்லை பித்தனின் வாகு அவர்களே இது இணையத்தில் கிடைத்ததுதான்.

Kavinaya said...

//கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணுந் திரமா யிருப்போமென் றெண்ணுதே.//

ஒவ்வொரு வரியும் முத்து. அதிலும் 45 முதலாக சிவபெருமானை வர்ணித்திருப்பதும் ரொம்பப் பிடித்தது. கவனமா படிங்கன்னு சரியாத்தான் சொல்லியிருக்கீங்க :) அதுக்குதான் நாளாயிருச்சு. இருந்தாலும் திரும்பத் திரும்பப் படிக்கணும். மிக்க நன்றி.

தேவன் said...

வருகைக்கு நன்றி கவிநயா அவர்களே !

Unknown said...

அருமை நமச்சிவாயம்

skumargsm said...

அருமை சிவாயநம

Unknown said...

பாராட்ட தகுதியற்ற பாவி நான் அதனால்.