குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

18 June, 2010

கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\_ 2

யோகம்வந்து மகிழ்வதும் விளையாட்டே - அதன்
உண்மைதெரி யாததுவும் விளையாட்டே
சாகசஞ் செய்வதுவும் விளையாட்டே - ஒருவர்
தஞ்சமென்று நினைப்பதுவும் விளையாட்டே.17

கோடிபணந் தேடுவதும் விளையாட்டே - அதைக்
குழிவெட்டிப் புதைப்பதுவும் விளையாட்டே
தேடியலைவதும் விளையாட்டே - மனந்
தேறுதலாய் திரிவதும் விளையாட்டே.18

கற்பனையுங் கபடமும் விளையாட்டே - அதைக்
காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே
சற்பங்க ளாட்டுவதும் விளையாட்டே - ஒரே
சாதனையாய்ப் பேசுவதும் விளையாட்டே.19

நம்பினோருக் காசைசொல்லல் விளையாட்டே - பின்பு
நாட்டாற்றில் போகவிடுதல் விளையாட்டே
கும்பிக் கிறைதேடுதல் விளையாட்டே - கடன்
கொடுத்தாரைக் கெடுத்தலும் விளையாட்டே.20

இச்சையால் மயங்குவதும் விளையாட்டே - அதை
இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே
பிச்சையெடுத் துண்பதுவும் விளையாட்டே - பொல்லாப்
பேய்போ லலைவதுவும் விளையாட்டே.21

முத்தி யறியாததும் விளையாட்டே - மேலாம்
மோட்சங் கருதாததும் விளையாட்டே
பத்திகொள் ளாததுவும் விளையாட்டே - மனம்
பாழிற் செலுத்தினதும் விளையாட்டே.22

கேடு வருவதுவும் விளையாட்டே - எதற்கும்
கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே
பாடு வருவதுவும் விளையாட்டே - மனப்
பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே.23

பாசவினை போக்காததும் விளையாட்டே - பெண்
பாவாயென் றழைப்பதும் விளையாட்டே
நேசமாய்த் தேடுவதுவும் விளையாட்டே - காணாமல்
நிமிடநேர மென்பதுவும் விளையாட்டே.24

நித்திரையிற் சொக்குவதும் விளையாட்டே - அதில்
நினைவுதடு மாறுவதுவும் விளையாட்டே
சித்தியடை யாததுவும் விளையாட்டே - ஞானம்
சிந்தியா திருப்பதுவும் விளையாட்டே.25

சொற்பனமுண் டாவதுவும் விளையாட்டே - மனம்
சொக்கா திருப்பதுவும் விளையாட்டே
விற்பனங்கண் டறிவதும் விளையாட்டே - வந்த
விதமறி யாததுவும் விளையாட்டே.26

பகலிர வென்பதுவும் விளையாட்டே - இகப்
பயனடைந் திருத்தலும் விளையாட்டே
சகவாழ்விற் சிக்குவதும் விளையாட்டே - யோக
சாதன மறியாததும் விளையாட்டே.27

புத்திமா னென்பதுவும் விளையாட்டே - இப்
பூதலத்தோ ரேத்துவதும் விளையாட்டே
வெற்றி யடைவதுவும் விளையாட்டே - நான்
வீரனென்று சொல்வதுவும் விளையாட்டே.28

தவநிலை தோணாததும் விளையாட்டே - ஞான
தத்துவந் தெரியாததும் விளையாட்டே
பவமது போக்காததும் விளையாட்டே - ஏக
பரவௌி காணாததும் விளையாட்டே.29

யோகந் தெரியாததும் விளையாட்டே - அதன்
உண்மைதனைக் காணாததும் விளையாட்டே
பாகம் அறியாததும் விளையாட்டே - இகப்
பற்றுக்காது இருப்பதுவும் விளையாட்டே.30

பெரியோரைக் காணாததும் விளையாட்டே - கண்டு
பேரின்பஞ் சாராததும் விளையாட்டே
தெரியா திருந்ததுவும் விளையாட்டே - சிவ
தேக நிலை பாராததும் விளையாட்டே . 31

அஞ்ஞானமுட் கொண்டதுவும் விளையாட்டே -பே
ரறிவாற் றெரியாததும் விளையாட்டே
மெய்ஞ்ஞானங் காணாததும் விளையாட்டே - இந்த
மேதினியே போதுமெனல் விளையாட்ட. 32


வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

திருவருள் போற்றி ! குருவருள் போற்றி !!

06 June, 2010

கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர்_/\_ 1

நானெல்லாம் எழுதுவேன் என்று நினைத்தது இல்லை. விளையாட்டாய் ஆரம்பித்து இன்றும் விளையாட்டாகவே போய்க் கொண்டிருக்கிறது. என்னைப்பற்றியும் இவர் தெரிந்து வைத்திருக்கிறார் பாருங்கள்... சரி இப்பதிவில் கடேந்திர நாதர் எனும் விளையாட்டு சித்தர் பற்றி பார்ப்போமா...

தமிழ் நாட்டைப்போலவே வடநாட்டிலும் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களை நவநாத சித்தர்கள் என்கிறார்கள். அவர்கள்;
1.சத்திய நாதர், 2.சதோக நாதர், 3.ஆதிநாதர், 4.வெகுளி நாதர், 5.மதங்கநாதர், 6.மச்சேந்திர நாதர், 7.கடேந்திர நாதர், 8.அநாதி நாதர், 9.கோரக்க நாதர். ஆகியோர்.

இவர்களில் கடேந்திர நாதர் வட நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு கோவைக்கு அருகில் இருக்கும் வெள்ளயங்கிரி மலையில் வசித்திருக்கிறார். இங்குள்ள ஐந்தாவது மலையில் இருக்கும் குகை ஒன்றை இவரது குகை என்று சொல்கிறார்கள். இல்லை, இல்லை இவர் புதுச்சேரிக்காரர் என்கிறார்கள் ஒரு சாரர் சரி எதுவாகினும் சரி; எக்காலத்தில் இங்கு வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இவரைப்பற்றிய வேறு எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

ஞானம் வாய்த்தவருக்கு மொழியறிவு என்ன ஒரு பெரிய விசயமா? தமிழ் இலக்கணம் அறிந்து அதனில் பாடலும் இயற்றிப் பாடியிருக்கிறார். எங்கெங்கிருந்தோ வந்தவர்கள் நம் பெருமை அறிந்தனர், நாமோ நமதருமை தெரியாமல் இருக்கிறோம் இன்னும்... சரி இதோ பாடல்கள் ...

கண்ணிகள்

ஆதிசிவ மானகுரு விளையாட்டை - யான்
அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டை
சோதிமய மானசத்தி யென்னாத்தாள் - சுய
சொரூபத் தடங்கிநின்ற விளையாட்டை. 1

பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் - ஞானம்
பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்
சீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவினை - யாட்டுச்
சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில். 2

இகபர மிரண்டுக்குஞ் சரியாகும் - இதை
இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே
சகலமும் விளையாட்டாய் பிரமமுனி - முன்பு
சாற்றினா ரெந்தனுக்கீ துண்மையுடன். 3

நானென்று சொல்வதும் விளையாட்டே - இந்த
நானிலத் திருப்பதுவும் விளையாட்டே
தானென் றறிவதுவும் விளையாட்டே - பெற்ற
தாயென் றுரைப்பதுவும் விளையாட்டே. 4

தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவிற்
தநயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே - பத்து
வயது தெரிந்ததுவும் விளையாட்டே. 5

பெற்றபிள்ளை என்றதுவும் விளையாட்டே - தந்தை
பேரிட் டழைத்ததுவும் விளையாட்டே
மற்றதை யுணர்வதுவும் விளையாட்டே - இந்த
வையகத் திருப்பதுவும் விளையாட்டே. 6

பெண்டுபிள்ளை யென்பதுவும் விளையாட்டே - எங்கும்
பேரோங்க வாழ்வதும் விளையாட்டே
கண்டுபொருள் தேடுவதும் விளையாட்டே - பணம்
காசுவட்டி போடுவதும் விளையாட்டே. 7

மாடிமனை வீடுவாசல் விளையாட்டே - என்றன்
மனைவிமக்க ளென்பதுவும் விளையாட்டே
தேடிவைத்த பொருளெல்லாம் விளையாட்டே - இச்
செகத்திற் திரிவதுவும் விளையாட்டே. 8

ஆடுமாடு தேடுவதும் விளையாட்டே - சதுர்வே
தாகமநூ லாய்வதுவும் விளையாட்டே
கூடுவிட்டுப் போகுமுயிர் விளையாட்டே - உற்றார்
கூடிமகிழப் பேசுவதும் விளையாட்டே. 9

பிணமா யிருப்பதுவும் விளையாட்டே - அதைப்
பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே - ஈமங்
கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே. 10

செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே - சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே - குளித்து
வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.11

வீணாட் கழிவதுவும் விளையாட்டே - சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே - குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே. 12

கனவுநினை வெண்பதுவும் விளையாட்டே - இக்
காசினியோ ருழல்வதும் விளையாட்டே
நினவாய்ச்சேய் வஞ்சகமும் விளையாட்டே - மிக்க
நிதிநிலம் பெண்ணென்பதும் விளையாட்டே. 13

பெண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - அவர்
பின்னாற் திரிவதுவும் விளையாட்டே
மண்ணாசை யென்பதுவும் விளையாட்டே - நல்ல
வயல்தோட்டம் புஞ்சையெல்லாம் விளையாட்டே. 14

சீராக வாழ்வதுவும் விளையாட்டே - செம்பொன்
சேகரித்து வைப்பதுவும் விளையாட்டே
நேராய்ப்பொய் சொல்வதுவும் விளையாட்டே - நெஞ்சில்
நினக்காமற் செய்வதுவும் விளையாட்டே. 15


பந்துசன மென்பதெல்லாம் விளையாட்டே - லோகப்
பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே
சொந்தநிதி தேடுவதும் விளையாட்டே - இதைச்
சொற்பனம்போ லெண்ணாததும் விளையாட்டே. 16

வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

திருவருள் போற்றி ! குருவருள் போற்றி !!

25 May, 2010

சட்டைமுனி (நாதர்) _/\_

இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார்.

ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன.

அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்றக் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது.

சட்டைமுனி ஞானம்

எண்சீர் விருத்தம்

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே. 1

தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே. 2

கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே. 3

பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய்
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! 4

தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே. 5

பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ?
பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ?
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே. 6

(பாடல்கள் நிறைவுபெற்றது.)

சட்டைமுனி (நாதர்) சித்தர் தாள் போற்றி !

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

14 May, 2010

பிண்ணாக்கு சித்தர் _/\_ 2

வளரும் என் வருகை... பிண்ணாக்கு சித்தர் பாடல்களுடன்...

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும்
நித்திரையும்விட்டு - ஞானம்மா
நினைவோடு இருக்கணுமே.7

நினைவைக் கனவாக நீயெண்ணியே பார்க்கில்
சினமாய்வரும் எமனும் - ஞானம்மா
தெண்டநிட்டுப் போவானே.8

யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல்
மோகம் எனும் குழியில் - ஞானம்மா
மூழ்கியேபோவார்கள்.9

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து - ஞானம்மா
அலைவார் வெகுகோடி.10

பூச்சும்வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே - ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி.11

கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் - ஞானம்மா
கலங்கி அழுதாரடி.12

மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ - ஞானம்மா
நலிந்தே அழுவாரடி.13

கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா
தெரியாதே அலைவாரே.14

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம்
உத்தமர்போலப் பேசி - ஞானம்மா
உலகில் திரிவாரடி.15

காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும்
காட்டில் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிதல் ஆகாதே.16

நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது
இல்லாவெளிச்சமது - ஞானம்மா
ஈனவெளிச்சமடி.17

சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
இம்சையடைவோர்கள் - ஞானம்மா
இருந்து பயன் ஆவதென்ன.18

காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது - ஞானம்மா
உப்பிலாப் பொய்க்கூடு.19

அஞ்சுபேர்கூடி அரசாளவே தேடி
சஞ்சாரஞ் செய்ய - ஞானம்மா
தானமைத்த பொய்க்கூடே.௨0

பிண்ணாக்கு சித்தர் தாள் போற்றி !

நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

[மேலும் ஒரு சித்தருடன் தொடர்ந்து [நடை போடுவோம்......]

06 May, 2010

பிண்ணாக்கு சித்தர் _/\_ 1

இது காரணப் பெயராக இருக்கலாம், இருந்தாலும் இவரது பெயருக்கான காரணம் இன்னதென்று தெரியவில்லை. பிண்ணாக்கு சித்தர் என்ற பெயரில் இரு வேறு சித்தர்கள் இருந்திருக்கலாம், அதையே இந்தப் பாடல் உறுதி படுத்துகிறது.

காத்தடைத்து வந்ததிது கசமாலாப் பாண்டமிது
ஊத்தச் சடலமிது உப்பிலாப் பொய்க்கூடு 19

இதில் வரும் கசமாலம் என்ற சொல்லில் சென்னை தமிழில் வருகிறது. இதிலிருந்து இவர் பிற்கால பிண்ணாக்கு சித்தர் என்பது புலனாகிறது. அல்லது போகர் குறிப்பிடும் பிண்ணாக்கீசரிலும் இவர் வேறு சித்தராக இருக்கலாம்.

சித்தர் பாடல்களில் இவர் இயற்றியதாக இருக்கும் பாடல்களில் 20 கண்ணிகள் ஒரு தொகுப்பும், 45 பாடல்களில் முப்பூச் சுண்ணச் செயநீர்ப் பாடல்கள் ஒரு தொகுப்பும் கிடைக்கப் பெறுகிறது. எனவே முப்பூச் சுண்ணச் செயநீர்ப் பாடல்களை பாடியது ஒரு பிண்ணாக்கு சித்தர் எனவும், மனோன்மணியாளை பாடியது ஒரு பிண்ணாக்கு சித்தர் என்பதும் ஏற்பிற்குரியது.

இவரது பாடல்கள் ...

தேவிமனோன்மணியாள் திருப்பாதம் காணஎன்று
தாவித்திரந்தேளே - ஞானம்மா
சரணம் சரணம் என்றே.1

அஞ்ஞானமும்கடந்து அறிவை மிகச்செலுத்தி
மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் - ஞானம்மா
விலையிலா ரத்தினமடி 2

முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல்
சட்டையாம் தேகத்துள்ளே - ஞானம்மா
தானுயிரு நிற்பதடி. 3

விட்டகுறைவாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல்
தொட்டகுறை ஆனதினால் - ஞானம்மா
தோன்றுமெய்ஞ் ஞானமடி.4

தம்முளம் அறியாமல் சரத்தைத்தெரியாமல்
சம்சாரம் மெய்யென்று - ஞானம்மா
சாகரத்திலே உழல்வார்.5

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்
துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா
சொன்னால் வருமோசம்.6


வருவேன் இன்னும் இவர் பாடல்களுடன்....

நல்லோர் பதம் போற்றி!

26 April, 2010

தங்கவேல் லோகாயத சித்தர் :_/\_


இவரைப்பற்றிய வாழ்க்கை குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. இவர் பெயர் கூட இவரது கடைசிப் பாடலில் இருந்து அறியப்பட்டது. இவர் பாடல்கள் மிகுந்த அவரது அறிவாற்றலை நமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

தமிழர்களின் மரபில் மார்க்சியத்தின் அறிமுகமும், பெரியாரின் பகுத்தறிவு கால எழுச்சியும் தொடங்குவதற்கு முன்பாக இருந்த பார்ப்பன எதிர்ப்புடன் கூடிய மனிதத்துவ அரசியலின் வேர்களை நாம் தேடினால் அந்த தேடல்கள் நம்மை சித்தர்களிடமே கொண்டு சேர்க்கும். பொதுவாக ஒரு குறியீடாக மட்டுமே சில கடவுளர் பெயர்களை தங்கள் பாடல்களில் பயன்படுத்தினாலும் பெரும்பாலான சித்தர்கள் மனிதத்துவ அரசியலையே முன் நிறுத்தியதை நாம் அறிவோம்.ஆனால் முழுக்க முழுக்க கடவுள் மறுப்பையும் பொருள்முதல்வாத அரசியலையும் அடித்தளமாகக் கொண்டு தனது பாடலை பாடியிருக்கிறார் தங்கவேல் லோகாயத சித்தர்.

பரிணாம வளர்சியின் மூலம் மனிதன் உருவானது பற்றிய அறிவு,பார்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்ட சாதியம் பற்றிய புரிதல் மற்றும் அவர்களின் வேதங்களை சாடுதல்,இனக்குழு வாழ்கையின் நடுகற்களும் சிறுதெய்வங்களும் பார்ப்பனிய மயப்படுத்தபட்டதை சுட்டிகாட்டுதல்,புத்தர் திருவள்ளுவர்,திருமூலர் எழுத்துக்களில் திரிபுகள் செய்யப்பட்டதை குறித்தல் என்று ஒற்றை பாட்டில் லோகாயத சித்தர் செல்லி செல்லும் விசயங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

புராணங்களை பொய்மையின் குன்று என சொல்லும் இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு முத்து தான்.

திண்ணத்தின் உரை; தெளிந்த அறிவில் கசிந்த வரிகள்; தமிழின் அணி சேர்க்கும் வார்த்தைகள்; எளிய தமிழ் நடை;

இத்தனைக்கும் சொந்தமான பாடல் வரிகள் இதோ....

பொருளும் இருப்பும் இயற்கையும் முதன்மை -நாம்
போற்றும் உணர்வெண்ணம் இரண்டாம் தன்மை
கருதும் நம் ஆத்துமா அறிவின் துடிப்பு - அதனை
கடந்ததுமே கடவுள் எனல் கற்பனை பிடிப்பு

இயற்கையே மானுடர் வாழ்விற்கு வழியாம் -அவ்
இயற்கையே எண்ணத்தின் மேலான வழியாம்
இயற்கையை வென்றதும் மானுடம்தானே -இவ்
இயற்கைக்கு மேல் ஒன்றும் இல்லை என்பேனே

விலங்கிலிருந்து வளர்ந்தவர் நாமே - பின்
விலங்காண்டி ஆனதும் மாந்தர்கள்தாமே
உலகில் இயற்கையில் கற்றனர் பாடம்-மன
ஆறாம் அறிவாலே உற்றனர் மாடம்

உழைப்பே மனிதனின் உன்னத ஆற்றல் -கடும்
உழைப்பினால் வந்ததே உயர்வு முன்னேற்றம்
உழைத்துப் படைத்தது மானிடம் அன்றோ -அட
அதனின் உயர்ந்தது உண்டெனல் நன்றோ

மாறிக்கொண்டிருப்பது மாளா இயற்கை - தன்
மாற்றத்தில் படைத்தது மாந்தர் இனத்தை
ஏறிகொண்டிருந்திடும் காலப்பிடியில் - மனிதன்
எத்துனை புதுமைகள் செய்தான் முடிவில்

பொருளே உலகத்தில் சாகா உயிர்கள் - அந்த
பொருளின் இயக்கமே வையப் பயிர்கள்
பொருளே வளர்ச்சியின் தொட்டில் அந்த
பொருளின்றி இல்லை சிறப்புடை தொட்டில்

மனிதனுக்கு மேலொரு தெய்வமும் இல்லை -இந்த
மானுடம் போலொரு மெய்மையும் இல்லை
மனிதன் இயற்கையின் எதிரொலிச் சின்னம் -உழைப்பு
மனம் இல்லையேல் அவன் விலங்கான்டி இனம்

செத்தவர்க்காகவே நட்ட நடுகற்கள் - பல
தெய்வங்களாம் இவைநச்சுமிழ் பற்கள்
உய்த்துணரா முன்னம் இயற்க்கையின் போக்கை -அட
உண்டாக்கினர் கடவுளின் நோக்கை

உண்மையை கானும் அறிவில்லா போது - கடவுள்
உருவாகி உலகில் உண்டாயிற்று தீது
உண்மை ஒளி அறியாமையை தக்க - சில
ஞானிகள் தோன்றினர் வைய்யகத்தை காக்க

வந்தேறிகள் சிலர் நாட்டில் புகுந்தார் - இயற்கை
வாழ்வுணராமலே தீமைகள் தந்தார்
சிந்தனை இல்லா நெஞ்சில் சேர்ந்தது தீமை - பல
சிறுதெய்வ கூட்டங்கள் சேர்ந்தன ஆமை

காலங்கள் தோரும் அறிவின் குறைவு - தான்
கண்டதே கொண்டதே கடவுளின் நிறைவு
காலங்கள் மாறிடும் காகங்கள் தோறும் - உள்ள
கடவுள்களின் மத வேரும் பேரும்

அறிவுடை கடவுள்கள் ஒன்றேனும் இல்லை - கடவுள்
அவ்வவ் இனத்தின் அறியாமை எல்லை
செறிவுடை சிந்தனை தெளிந்தநீர் ஊற்று - தான்
தெய்வத்தின் தப்பெண்ணத்திற் கொரு கூற்று

அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்ஞானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை

வேதங்கள் ஆவது பேசின் பேச்சு - உள
உபநிடதங்கள் அச்சத்தின் மூச்சு
பூதங்கள் ஐந்துக்கு மேல் இல்லை ஒன்று கூறும்
புராணங்கள் யாவுமே பொய்மையின் குன்று

அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்னானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை

சாத்திரம் என்பது சண்டை சரக்கு - அட
சமயங்கள் பகைமை பனைக்கள் இரக்கு
தோத்திர குப்பைகள் மூடர்கள் கூச்சல் - எண்ணத்
தொலையாத தர்க்கங்கள் பொஞ்ஞானக்காய்ச்சல்

செல்லரித்துப்போன வேதத்தின் பாட்டும் -உலகில்
செலவானியாகாத சமயத்தின் கூட்டும்
வல்லமை வாய்ந்த நல் காலத்தின் போக்கால் -மக்கள்
வாழ்வில் சலிப்புறும் ஒடிந்திடும் தேர்க்கால்

வேதாந்தம் என்பது வெறும் வெத்து வேட்டு - வேத
வியாக்கியானம் எல்லாமே பொருந்தாத பூட்டு
நாதாந்த்ம் என்பதும் பொய்புனை சுருட்டு - அட
நமசிவாயம் தன் நலமான புரட்டு

ஆன்மீக வாதம் ஒரு செத்த பிணங்காண் - வேத
ஆகமங்கள் யாவும் புற்று நோயின் ரணங்காண்
ஆன்மா என்பதும் பொய்யின் கற்ப்பனை - வெறும்
ஆத்திகம் என்பது தன்னல விற்ப்பனை

அடுத்த உலகம் என்றொன்றும் இல்லை - கோள்
அடுத்த தல்லால் வேறுலகமும் இல்லை
படுத்தும் நரகமும் சொர்க்கமும் இல்லை - மக்கள்
பண்படா காலத்தில் புகுந்த ஒர் தொல்லை

நன்மையின் ஆற்றலை தந்ததும் உண்மை - மனிதர்
நாளும் உயர்ந்திட செய்ததும் உண்மை
புண்மைகள் தீர்த்தது பகுத்தறிவாட்சி - தனை
புரிந்திட வைப்பதே லோகாதய மாட்சி

புத்தன் திருவள்ளுவர் சீல திருமூலர் - இந்த
பூமியிலே பிறந்து சிறந்த நல்சீலர்
எத்தனை பொய்புனை அவர்களின் நூலில் - பல
எத்தர்கள் இட்டனர் பிழைகளை காலில்

உண்மையும் எண்ணையும் இறுதியில் வெல்லும் - உலகில்
ஓங்கிடும் காற்றினால் பிரியும் நெல்லும் புல்லும்
மண்ணில் உலோகாயதமே உயரும் - கால
மாறுதல் வாய்மையின் பாலை நுகரும்

உழைக்காமல் உண்ணுவோர் தீயபாழ் ஊள்ளம் - இந்த
உலகத்தில் தோற்றிற்று மதமான பள்ளம்
பிழையே பிழைப்பாக சாதிகல் தந்தார் - மக்கள்
பேதத்தில் வாழ்வை சுரண்டி உவந்தார்

இயற்கை வளங்களை கண்டவன் மனிதன் - மக்கள்
ஏற்றத்தில் கவற்றை இணைத்தவன் மனிதன்
செயற்கை வளங்களை செய்தவன் மனிதன் - தனை
செய்யகூட தெரியாதவன் கடவுளா - புனிதன்?

மனிதனே சமூகத்தில் உயிருக்கு நாடி சமய
மதங்கள் வளர்ந்தன கடவுள்கள் கோடி
மனிதனே உலகத்தின் தலைவன் - அவனே
அணைத்துக்கும் மாண்புள்ள புலவன்

நெய்யினால் நெருப்பை அணைக்க எண்ணாதே அறிவு
நியாத்தால் லோகாயதம் மறைக்க எண்ணாதே
பொய்யிது மாயைதான் வாழ்வென்ருரைப்பீர் - உம்
பெண்டாட்டி பிள்ளை பெற்றோரை எங்கொளிபீர்

உலகத்தில் அனைட்துயிர் உருவங்கள் இறக்கும்
உயிர்மட்டும் என்றென்றும் இறவது இருக்கும்
உலக இயற்கையை வெல்வதே வாழ்கை
உலகில் நிலையாமை பேசிடல் தாழ்க்கை

தகுதியின் மிகுதியே வெல்லும் - இந்த
தங்கவேல்லோகாயதரின் சொல்லும் வெல்லும்
மிகுதியாம் பொய்யாதே சமயங்கள் ஒடும் - நாளை
மேன்மையாம் மெய்வாழ்க்கை ஒத்திசை பாடும்



நன்றி :-
http://stalinguru.blogspot.com/