குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

31 December, 2009

ஒளவையின் சிலேடை :


ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:

"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.

"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என்பதாகும் அவ்வரிகள்.

இதையும் சேர்த்து முழுப்பாடலாக,

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "

என்பதாகும்.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"

என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."

தமிழில் "" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் ரி எருமை. எமனேறும் ரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு பார்த்தீர்களா !!

16 comments:

SRI DHARAN said...

அன்றைய நாட்களில் சினம் கொண்டாலும் தங்கள் அறிவை வைத்து வெளிப்படுத்தினார்கள். இன்றோ ஆயுதத்தை வைத்து வெளிப்படுத்துகிறார்கள், இன்று ஒரு புது விஷயம் தெரிந்துகொண்டேன், நன்றி ! தொடரவும் ! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

தேவன் said...

நண்பரே ! உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
கருத்திட்டமைக்கு நன்றி !

மனோவியம் said...

தமிழ் என்றாலே இனிமை.உங்கள் ப்திவும் ஒரு இனிமைதான் ஐயா. தங்களின் கவிச்சுவையும் தமிழ்ச்சுவையும் சேர்ந்து தித்திப்பாக இருந்தது. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.

தேவன் said...

வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி!

பனித்துளி சங்கர் said...

உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

கோபத்திலும், தமிழில் விளையாடுகிற அவர்களின் திறன் கண்டு வியந்தேன்..

வாழ்த்துகள்

தேவன் said...

/// சங்கர் said...

உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள் ///


வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி சங்கர் ஐயா !

தேவன் said...

/// கோபத்திலும், தமிழில் விளையாடுகிற அவர்களின் திறன் கண்டு வியந்தேன்.. ///

பட்டமரத்தை பச்சையாக மாற்றியவருக்கு இதென்ன பெரிய விசயமா?

வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி நிகழ்காலத்தில் ஐயா !

Kavinaya said...

ஔவையின் சிலேடை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

தேவன் said...

/// ஔவையின் சிலேடை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. ///

நன்றிங்க!

பித்தனின் வாக்கு said...

இந்தப் பாடல்கள் புலவர்கள் சண்டையால் வந்த கவிதை என்று குரிப்பிட்டுள்ளீர்கள். இதில் திட்டும் வண்ணம்தான் உள்ளது. சிலேடை என்பது பாரட்டும் வண்ணமும் இருக்க வேண்டும். ஒரு காலடி என்று ஒவையாரின் பழமொழிகள் ஒரு அடியில் வரும் வண்ணமும், பாடல்கள் நாலு வரிகளில் வரும் வண்ணமும் இருப்பதைப் பாராட்டும் வண்ணம் ஒரு காலடி நாலிலைப் பந்தல் எனக் குறிப்பிட்டார். இது போல ஒவையாரும் தந்து பாடலில் கம்பனின் சிறப்பை இந்த பாடலில் குறிப்பிட்டுள்ளார். அதன் விளக்கம் கிடைக்குமா என்று கூறுங்கள். நன்றி.

ஈற்றடியைக் கொண்டு அடுத்த வரிகளைத் தொடங்கும் பத்திகள், கம்ப இராமாயணத்தில் நிறைய வரும் இவை முதல் நாலு அடிகளுடன் தொடர்பு கொண்டு இருக்கும், ஆதலால் ஒரு பாடல் எட்டு அடிகளைக் கொண்டு இருக்கும். அதுதான் எட்டே கால் லட்சணம். முட்ட மேற்கூரையில்லா வீடு என்றால் வான்புகழ் என்றும் கொள்ளலாம். இராமனின் காதையைக் கூறுவதால் இராமனின் தூதுவன். இதுபோல மற்ற விளக்கங்கள் தெரியுமா என்று கூறவும். சிலேடையில் திட்டும் விளக்கம் மட்டும் உள்ளது. பாராட்டும் விளக்கம் வேண்டும்.

தேவன் said...

முயற்சிக்கிறேன் முடிந்தவரை இதற்கு விளக்கம் தர கருத்திட்டமைக்கு நன்றி. பித்தனின் வாக்கு அவர்களே!

radjasiva said...

சின்ன வயசுல, தமிழ் வாத்தியார்
பாடம் நடத்தும்போது-ஔவையின்
இந்த பாடல் பெருமையையும்-கூறி
புரிய வைக்க முயற்சி செய்வார்-
அப்ப புரியல....

மறுபடி இப்போ படிக்கிறப்போ புரியுது.
சந்தோஷமா இருக்கு.

நன்றி-கேசவன்.

தேவன் said...

//// சின்ன வயசுல, தமிழ் வாத்தியார்
பாடம் நடத்தும்போது-ஔவையின்
இந்த பாடல் பெருமையையும்-கூறி
புரிய வைக்க முயற்சி செய்வார்-
அப்ப புரியல....

மறுபடி இப்போ படிக்கிறப்போ புரியுது.
சந்தோஷமா இருக்கு.

நன்றி-கேசவன். ///

முதல் கருத்திட்டமைக்கு நன்றிகள் பல உரித்தாக்குகிறேன்.

நன்றி!

hayyram said...

அழகுத்தமிழ் எவ்வளவு கேட்கினும் இன்பமே. தொடர்வீர்.

தேவன் said...

///அழகுத்தமிழ் எவ்வளவு கேட்கினும் இன்பமே. தொடர்வீர்.///

நன்றி ! அண்ணா!